சமுதாய கூடத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு
நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. அருகில் இருந்த பழுதடைந்த கட்டடம் 3 ஆண்டுகளுக்கு முன் இடத்துவிட்டு, வேறு இடத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கப்பட்டது. 3 ஆண்டுகளாகியும் இப்பணி முடியவில்லை. இதனால், தனியார் வீடு மற்றும் சமுதாய கூடத்தில் வகுப்புகள் நடந்து வருகிறது. அங்கு கழிவறை வசதி இல்லாததால் பள்ளியில் உள்ள கழிவறைக்கு மாணவர்கள் வந்து செல்கின்றனர். மேலும், தலைமை ஆசிரியர் ஒரு இடத்திலும், ஆசிரியர்கள் வேறு இடத்திலும் வகுப்பு நடத்துவதால் கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. போதுமான கட்டட வசதி இல்லாததால், 3 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், பள்ளி மூட வேண்டிய அபாய நிலை ஏற்படும். கல்வி துறை அதிகாரிகள் அலட்சிய போக்கு பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாணவர்கள் நலன்கருதி புதிய கட்டடப் பணியை துரிதப்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.