சாம்பா சாகுபடிக்கு தண்ணீர்... கிடைக்குமா : டெல்டா விவசாயிகள் ஏக்கம்
காட்டுமன்னார்கோயில்:மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் டெல்டாவில் பிரதான ஒரு போகம் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகத்தால், விவசாயிகள் சாகுபடி பணியை துவங்காமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலுார் மாவட்டத்தின் டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோயில், , சிதம்பரம் மற்றும் புவனகிரி தாலுக்காக்களில் 1.10 லட்சம் ஏக்கர் காவிரி ஆற்று பாசன வசதி பெற்று வருகிறது. காவிரி ஆற்று தண்ணீர் பங்கீட்டு பிரச்னையால் ஏற்பட்ட பாசனம் பற்றாக்குறையால் கடந்த பல ஆண்டுகளாக மாவட்டத்தின் டெல்டா பகுதியில் விவசாயிகள் குறுவை சாகுபடியை தவிர்த்து, அதிக அளவில் ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே செய்கின்றனர். ஆழ்குழாய் போர்வெல் வசதி உள்ள சில விவசாயிகள் மட்டும் குறுவை சாகுபடி செய்கின்றனர். கடந்தாண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்ததால், நம்பிக்கையுடன் டெல்டா விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடியை செய்தனர். ஆனால், இந்த ஆண்டு டெல்டாவில் போதிய கோடை மழை பெய்யாததால் கடுமையான வெப்பத் தாக்கம் ஏற்பட்டு நீர் நிலைகள் வறண்டு போயுள்ளது. மேலும் 'எல் நினோ' காரணமாக மேலும் வெப்பம் அதிகரித்து டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஆழ்துளை கிணறும் சரியாக வேலை செய்யாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். டெல்டாவில் இந்த ஆண்டு ஒரு போக சம்பா சாகுபடிக்கான பராமத்து பணிகளை கூட விவசாயிகள் சரியாக துவங்காமல் சோர்வு அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணையில் தண்ணீர் 120 அடியை எட்டியிருந்தது. இந்த ஆண்டு மேட்டூரில் 73.50 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில் குடிநீருக்காக 1,000 கன அடி அளவில் மட்டுமே தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் மிகவும் குறைந்த அளவில் தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு ஒரு போக சம்பா சாகுபடி செய்ய முடியுமா என்ற சந்தேகம் விவசாயிகள் இடையே ஏற்பட்டுள்ளது. ஒரு போக சம்பா சாகுபடியை செய்ய வானம் பார்த்த பூமி போன்று வடக்கிழக்கு பருவ மழையை நம்பி தான் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் 'எல் நினோ' வானிலை மாற்றத்தால் பருவ மழையும் குறைந்து தான் பெய்யும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதால் டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பா சாகுபடி ஆகஸ்ட் முதல் வாரத்தில் (ஆடி மாதம்) துவங்கி டிசம்பர் அல்லது ஜனவரி (தை) மாதம் முடிவடையும். தற்போது ஆகஸ்ட் மாதம் துவங்கிய நிலையில் டெல்டாவில் சம்பா சாகுபடி துவங்கப்படவில்லை. விவசாயிகள் இடையே அதற்கான அறிகுறியும் தென்படவில்லை. மேலும் மேட்டூர் அணைக்கு போதிய தண்ணீர் வரும் என்ற முகாந்திரமும் இல்லாததால் டெல்டாவில் பிரதான நெல் சாகுபடி பருவமான சம்பா சாகுபடியும் பொய்த்து போகுமோ என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். காவிரி ஆறு பாசன டெல்டா பகுதி வானம் பார்த்த பூமி போன்று இருப்பதாக டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.