பெண்ணையாற்றில் தடுப்பு சுவர் அடிக்கல் நாட்டினார் அமைச்சர்
கடலுார்: பெண்ணையாற்றின் கரைகளை ரூ.9.90 கோடி மதிப்பில் பலப்படுத்தும் பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.பெண்ணையாற்றில் அதிகப்படியான வெள்ள நீர் சென்றதால் பண்ருட்டி மற்றும் கடலுார் பகுதிகளில் கரை உடைப்பு ஏற்பட்டு கரையோர கிராமங்கள் மற்றும் விளை நிலங்களில் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தினை ஏற்படுத்தியது.பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக மஞ்சக்குப்பம் முதல் குண்டு உப்பலவாடி வரை நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ. 9.90 கோடி மதிப்பீட்டில் 160 மீ ஆர்.சி.சி தடுப்புச்சுவர், 575 மீ சரிவுச்சுவர், மழைநீர் வடிவதற்கு வடிகால் மதகு அமைத்தல், 2100 மீ பெண்ணையாற்றின் வலது புற கரையினை பலப்படுத்தி, ஆற்றின் உட்பகுதியில் உள்ள மண் திட்டுகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் அனு, நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் காந்தரூபன், அருணகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.