உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் குவாரி கலவர வழக்கு அமைச்சர் சிவசங்கர் விடுவிப்பு

மணல் குவாரி கலவர வழக்கு அமைச்சர் சிவசங்கர் விடுவிப்பு

கடலுார்: திட்டக்குடி அருகே நடந்த மணல் குவாரி கலவர வழக்கிலிருந்து, அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட 27 பேரையும் விடுவித்து, கடலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த நெய்வாசல் கிராமம் அருகே வெள்ளாற்றில் 2015ம் ஆண்டு அரசு மணல் குவாரி செயல்பட்டது. இதனால் ஆற்றின் மறுகரையிலுள்ள அரியலுார் மாவட்டம், சன்னாசிநல்லுார் கிராமத்தின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக, அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 2015ம் ஆண்டு, பிப்ரவரி 4ம் தேதி, குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த சிவசங்கர் தலைமையில் பொதுமக்கள் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடுக்க முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமாக மாறியதில் போலீசார் காயமடைந்தனர். போலீசார் நடத்திய தடியடியில் பொதுமக்கள் காயமடைந்தனர். இது குறித்து ஆவினங்குடி போலீசார், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிவசங்கர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை கடலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், நீதிபதி சுபத்ராதேவி நேற்று தீர்ப்பளித்தார். அதில், தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள சிவசங்கர் உள்ளிட்ட 27 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை