மகனை விடுவிக்க கோரி தாய் தீக்குளிக்க முயற்சி
கடலுார் : கடலுார் துறைமுகம் போலீஸ் ஸ்டேஷன் முன் மகனை விடுவிக்க கோரி, தாய் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் துறைமுகம் அடுத்த ராசாப்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் தீபக்,20; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, அவரது மகன் சந்தோஷிற்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தீபக்கிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் தீபக் தாக்கியதில் காயமடைந்த சந்தோஷ், கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் துறைமுகம் போலீசார், நேற்று தீபக்கை கைது செய்தனர். இதையறிந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற தீபக்கின் தாய் அமலா,40; மகனை விடுவிக்க கோரி போலீசாரிடம் பேசினார். இதற்கு போலீசார் மறுத்ததால் ஆத்திரமடைந்து ஸ்டேஷன் எதிரில் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த போலீசார், காப்பாற்றி சமாதானம் செய்து அனுப்பினர்.