நகராட்சி அதிகாரிகள் அலட்சியம்: பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்து வாலிபர் ஒருவர் பலியானார். நெல்லிக்குப்பம் நகராட்சி, வான்பாக்கம் செல்லும் சாலையில் இரண்டு இடங்களில் உள்ள பழமையான பாலத்தின் தடுப்பு கட்டைகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. பாலம் உள்ள இடத்தின் இருபுறமும் சாலையை ஒட்டி, 7 அடி ஆழத்துக்கு மேல் பள்ளம் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பல தடவை புகார் கொடுத்தனர். ஆனாலும், அதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இறைச்சி கடை தொழிலாளியான நெல்லிக்குப்பம் ரயில்வேபீட்டர் சாலையை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் சலீம்பாஷா,24; தனது பைக்கில் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் ராஜி மகன் முருகனுடன்,21; வான்பாக்கம் சென்றார். அங்கிருந்து திரும்பி வரும் போது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் பைக்குடன் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே சலீம்பாஷா இறந்தார். படுகாயமடைந்த முருகன் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சுட்டிக்காட்டிய தினமலர்
அந்த பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக, தினமலர் நாளிதழில் இரண்டு முறை செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனாலும் நகராட்சி அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்தனர். தற்போது, வாலிபர் ஒருவர் அந்த பள்ளத்தில் விழுந்து பலியாகி இருக்கிறார். இதற்கு நகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.