கடலுார் மாநகரை அழகுபடுத்த புதிய திட்டம்: ஆறுகள் முகப்பை பசுமையாக்க முடிவு
கடலுார்: கடலுார் மாநகரத்தை அழகுபடுத்தும் திட்டத்தில் மற்றுமொறு பணியாக தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளின்முன்பகுதி முழுதும் பசுமை பகுதியாக உருவாக்க கருத்துருக்கள் அனுப்ப மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.கடலுார் மாநகராட்சி 1866ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்வு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.அதனைத்தொடர்ந்து 2021ம் ஆண்டு முதல் மாகநராட்சியாக அறிவிக்கப்பட்டது. இம்மாநகராட்சியின் பரப்பளவு 27.69 சதுர கி.மீ., ஆகும். மாநகர எல்லையில் கடலுார், முதுநகர் என, 45 வார்டுகள் வரை 2 லட்சம் பேர் வசிக்கின்றனர்.மாநகராட்சியின் தென் பகுதியில் கெடிலம் ஆறும், வடக்கு பகுதியில் தென்பெண்ணை ஆறும் அமைந்துள்ளன. இவ்விரு ஆறுகளும் மாநகரின் மையத்தில் ஓடுவதால் கடலுார் மாநகரத்தின் வடிகால் வசதிக்கு வரப்பிரசாதமாக உள்ளது.இந்த இரண்டு ஆறுகளும் மாநகராட்சி பகுதி களின் உயிர் நாடியாக அமைந்துள்ளன. கடலுார் மாநகரம் அழகுபடுத்தும் திட்டத்தில் சில்வர் பீச்சில் 5.7 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்ததாக ஆறுகளின் முன்பகுதிகளை பூங்கா, மரங்களை வைத்து சுற்றுலா தலமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.அவ்வாறு மேம்படுத்தும்போது, பேரிடர் தணிப்பு, காலநிலை மீள்தன்மை, பசுமை பகுதி உருவாக்கம் மற்றும் பொழுது போக்கு இடமாக அமையும். குறிப்பாக கலெக்டர் அலுவலகம் அருகே 3வது வார்டு உட்பட்ட பகுதியில் 12 ஏக்கரில் பல்வேறு பசுமைப்பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.அதேப்போல கடலுார் முதுநகர் கடற்கரையோரம் உள்ள சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம், அக்கரைக்கோரி ஆகிய பகுதி கள் புயல் வெள்ள காலத்தில் மோசமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. எனவே 40வது வார்டில் உள்ள 5 ஏக்கர் நிலப் பரப்பில் சுரபுண்ணை காடுகள் வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.புயல், பெருவெள்ளம், கனமழை போன்வற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகளின் முன்பகுதி மேம்பாடு செய்வது அவசியமாகிறது. இந்த பணி மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்திடம் மானிய நிதியினை பயன்படுத்தி திட்டத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக இன்று நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் அனுமதி வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.