உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரவு நேர பஸ்கள் நிறுத்தம் ஸ்ரீமுஷ்ணம் மக்கள் பாதிப்பு

இரவு நேர பஸ்கள் நிறுத்தம் ஸ்ரீமுஷ்ணம் மக்கள் பாதிப்பு

ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து இரவு 8:00 மணிக்கு மேல் வெளியூர்களுக்கு செல்லவும், வெளியூர்களில் இருந்து வரவும் பஸ்கள் இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஸ்ரீமுஷ்ணத்தில் புகழ் பெற்ற பூவராகசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் தற்போது தனி தாலுகா மற்றும் ஒன்றியமாக மாற்றப்பட்டு சுற்றுப்புற கிராமப்புறங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஸ்ரீமுஷ்ணம் வந்து செல்கின்றனர்.கடலூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக உள்ளதால் ஸ்ரீமுஷ்ணத்திற்கு காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், ஆண்டிமடம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் அதிகம் இயக்கப்படுகிறது.இந்நிலையில் இரவு நேரங்களில் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், ஆண்டிமடம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படும் தனியார் பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரவு 8:00 மணிக்கு மேல் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் வாடகை வாகனத்தில் வர வேண்டிய நிலை உள்ளது.இதேபோல் ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டதால் வெளியூருக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.விருத்தாசலத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் வரும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டதால், சென்னையில் இருந்து ரயில் மற்றும் பஸ் மூலம் இரவு 10:00 மணிக்கு மேல் விருத்தாசலம் வரும் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த பயணிகள் இரவு முழுவதும் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் நிறுத்தப்பட்ட தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ