திருட்டு சம்பவம் எதிரொலி போலீசார் வேண்டுகோள்
நெல்லிக்குப்பம் : பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது, திருட்டை தடுக்க தகவல் தெரிவிக்க வேண்டுமென, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். நெல்லிக்குப்பம் போலீசார் தங்கள் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆட்டோவில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.புதியதாக உருவாகிய நகர் பகுதி குடியிருப்புகளில் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. பகலில் வீடுகளை நோட்டமிட்டு இரவில் திருடுகின்றனர். பொருட்கள் விற்பனை செய்பவர்கள், பழுது நீக்கி தருவது போல் வருபவர்களிடம் வீட்டு விவரங்களை தெரிவிக்கக் கூடாது. அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். வீட்டின் பின்பக்க கதவை உடைத்தே திருட்டு நடப்பதால் பின்புறம் அதிக வெளிச்சம் தரக் கூடிய விளக்குகளை இரவில் பயன்படுத்த வேண்டும். குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பு காமராக்கள் பொருத்த வேண்டும். வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூர் சென்றால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றவாளிகள், திருட்டு பொருட்கள் வாங்குவோர், சந்தேகபடும்படியான நபர்கள் யாரேனும் தங்கியிருப்பது பற்றி தகவல் தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் கொடுப்பவர் பற்றிய விவரம் ரகசியம் காக்கப்படும். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை 9498154366, சப் இன்ஸ்பெக்டர் உலகநாதனை 9498100602 எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.