பஸ்சில் இருந்து தள்ளி விட்டதாக கண்டக்டர் மீது மாணவி புகார்
நெல்லிக்குப்பம்: பஸ்சில் கல்லுாரி மாணவியை தாக்கிய அரசு பஸ் கண்டக்டர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். நெல்லிக்குப்பம், இரண்டாவது கொத்வாபள்ளி தெருவை சேர்ந்தவர் சத்யசீலன் மகள் யாழினி,21; கடலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு மாணவி. நேற்று முன்தினம் கல்லுாரி முடிந்து நெல்லிக்குப்பம் வருவதற்கு கடலுாரில் இருந்து விழுப்புரம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். கண்டக்டராக பணியாற்றிய செல்வராஜ் நெல்லிக்குப்பத்தில் பஸ் நிற்காது எனக்கூறி யாழினியை இறங்குமாறு கூறினார். இருப்பினும் யாழினி டிக்கெட் எடுத்து பயணம் செய்தார். நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸை நிறுத்துமாறு யாழினி கூறியதற்கு செல்வராஜ் மறுத்ததோடு காலால் உதைத்தார். இதில் யாழினி பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். தன்னை பஸ்சில் இருந்து தள்ளி விட்டதாக நேற்று மாணவி அளித்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார், செல்வராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.