போக்குவரத்து காவல் நிலையம் : பொதுமக்கள் கோரிக்கை
திட்டக்குடி: திட்டக்குடியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில், திட்டக்குடி நகராட்சி மற்றும் தாலுகா தலைமையிடமாக உள்ளது. இங்குள்ள தொழுதுார் - விருத்தாசலம் நெடுஞ்சாலையை பயன்படுத்தி நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவனம், இறையூர் தனியார் சர்க்கரை ஆலை, அரியலுார் மாவட்டம், ஆலத்தியூர், தளவாய் பகுதிகளிலுள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டு, விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. மேலும், திட்டக்குடி அடுத்த ராமநத்தம் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இவ்வழியே பல்வேறு மாநிலங்களுக்கு அதிகளவு வாகனங்கள் செல்கின்றன. இங்கு விபத்துகள் ஏற்பட்டால், போலீஸ் பற்றாக்குறையால் போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் தாமதமாகும் சூழல் உள்ளது. அதைத்தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலம் போக்குவரத்து பிரிவு போலீசில் இருந்து திட்டக்குடிக்கு 1 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரு போலீசார் நியமித்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு குறைந்தது. ஆனால் திடீரென எவ்வித அறிவிப்புமின்றி போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டனர். இதனால் மீண்டும் வதிஷ்டபுரம் முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு தொடர்கிறது. எனவே, திட்டக்குடியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.