திருநங்கை தர்ணா விருதையில் பரபரப்பு
விருத்தாசலம் : விருத்தாசலம் ரயில் நிலைய வளாகத்தில் தண்டவாளத்தில் படுத்தபடி, திருநங்கை தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி - விழுப்புரம் பாசஞ்சர் ரயில் நேற்று இரவு 9:00 மணியளவில், விருத்தாசலம் ரயில் நிலையம் வந்தது. அப்போது, திருநங்கைகளுக்கும், சாமியார் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கிடைத்த தகவலின்படி, விருத்தாசலம் ரயில்வே போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது, திருநங்கையை தாக்கியதாக கூறப்படும் 40 வயது மதிக்கத்தக்க சாமியாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.இந்நிலையில், தாக்கப்பட்ட திருநங்கை தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக ஐந்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள், வாலிபர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ரயிலில் தவறாக நடக்க முயன்ற சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இரவு 11:00 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது.