பூதங்குடி வி.என்.எஸ்., மதகு வழியாக வீராணம் உபரி நீர் வெறியேற்றம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ்., மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் வீராணம் ஏரி துவங்கி லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் வரை மொத்தம் 14 கி.மீ., நீளம், 5 கி.மீ., அகலம் கொண்டது. மாவட்டத்தின் அதிக நீர்பிடிப்பு கொண்டுள்ள வீராணம் ஏரியில் மொத்த கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடி ஆகும். வீராணம் ஏரி மூலமாக டெல்டா கடை மடை பகுதிகளான சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, காட்டுன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் வட்டாரங்களில் 55 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வீராணம் ஏரியில் இருந்து மெட்ரோ நிறுவனம் விநாடிக்கு 74 கன அடி தண்ணீரை பம்ப் செய்து சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வருகிறது. கோடையில் வரலாறு காணாத அளவில் கடந்த 4ம் தேதி ஏரி முழு கொள்ளளவு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜானகி, ஏரியை ஆய்வு செய்தார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக வயல்கள், குளங்கள், வடிகால் வாய்க்கால் வழியாக வீராணம் ஏரிக்கு உபரி நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று பூதங்குடி வி.என்.எஸ்., மதகு ஷட்டர்களை திறந்து விநாடிக்கு 562 கன அடி உபரிநீரை வெளியேற்றி வருகின்றனர். உபரிநீரை வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கும் பணியில் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு பாசனப்பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.