பட்டாசு வெடித்ததை தட்டிகேட்ட வாலிபர் வெட்டி கொலை: பண்ருட்டி அருகே பயங்கரம்
பண்ருட்டி: பண்ருட்டி அருகே பட்டாசு வெடித்து ரகளையில் ஈடுபட்டவரை தட்டி கேட்ட தொழிலாளியை கத்தியால் வெட்டி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் சூரியமூர்த்தி மகன் பார்த்திபன், 26; என்,எல்.சி., ஒப்பந்த தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டு அருகே அதே பகுதியை சேர்ந்த துரை மகன் ராமர், 26; கலியமூர்த்தி மகன் வேலு,30; ஆகிய இருவரும் பட்டாசு வெடித்தனர்.அப்போது, பட்டாசு வெடித்த தீப்பொறி பார்த்திபன் தாய் பாக்கியலட்சுமி மீது விழுந்தது. இதை, பார்த்திபன் தட்டிகேட்டதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த வேலு, ராமர் இருவரும், பார்த்திபனின் தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல்சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பார்த்திபன் இறந்தார். இதுகுறித்து சூரியமூர்த்தி அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து ராமர், வேலு இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில், வேலு கஞ்சா விற்பனை வழக்கில் ஜாமினில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. இக்கொலை சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.