| ADDED : ஜூன் 27, 2024 04:15 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்ட உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் சார்பில், கடத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஒன்றிய தலைவர் சிவராமன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மனோகரன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் நேரம் காலமின்றி பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் பணிக்காலம் எவ்வளவு என்பதை தெளிவு படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் பணி செய்தவர்களுக்கு, 2 மாத ஊதியம் வழங்க வேண்டும். பணி பதிவேடு வழங்க வேண்டும். விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடித்தம் கூடாது. 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதிய உயர்வு, நிலுவை தொகை உடனே வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் பணி செய்ய வற்புறுத்தக்கூடாது. அனைவருக்கும் மாதம், 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.