பாலியல் தொல்லை, குழந்தை திருமணம் நடப்பாண்டில் 171 போக்சோ வழக்குப்பதிவு
பாலியல் தொல்லை, குழந்தை திருமணம்நடப்பாண்டில் 171 போக்சோ வழக்குப்பதிவுதர்மபுரி, நவ. 19-'தர்மபுரி மாவட்டத்தில், குழந்தை திருமணம், பாலியன் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்ப்பம் தொடர்பாக, 171 பேர் மீது, போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என, தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில், குழந்தை திருமணங்களை தடுக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு, சமூக நலத்துறை, போலீசார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் உதவி மையம், 1098 ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் மூலம், மாவட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்ப்பம், பள்ளி செல்ல குழந்தைகள், குழந்தை தொழிலாளர் முறை ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்க, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.மாவட்டத்தின் பல்வேறு துறைகள் மூலம் கடந்த, 2023 ல், 165 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. நடப்பாண்டில் ஜன., முதல் அக்., வரை பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், வளரிளம் பருவ கர்ப்பம் தொடர்பாக, 171 பேர் மீது, போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தாமாக முன்வந்து, குழந்தை திருமணம் குறித்து, புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால், கடந்தாண்டை விட இந்தாண்டு போக்சோ வழக்குப் பதிவு அதிகரித்துள்ளது. வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இன கவர்ச்சியால், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதில், குழந்தைகளுக்கு எதிரான, குற்றச்செயல்கள் நடப்பது தெரியவந்ததால் பொதுமக்கள், குழந்தைகள் சைல்டு லைனின், 1098 என்ற கட்டணம் இல்லாத எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் கொடுப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.