உறவினரை கொலை செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாடி அருகே, மேல்எண்டப்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம், 57. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர்களான ராஜ்குமார், 31, பெருமாள், 36 ஆகியோர் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த, 2018 அக்., 2 அன்று ஏற்பட்ட தகராறின்போது, ராஜ்குமார் கட்டையால் தாக்கியதில் பலத்தகாயம் அடைந்த வெங்கடாசலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் இறந்தார். பாப்பாரப்பட்டி போலீசார், ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், இறுதி கட்ட விசாரணை நடந்தது. இதில், குற்றவாளி ராஜ்குமாருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும், 7,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி மோனிகா நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சக்திவேல் ஆஜராகினார்.