தரமற்ற உணவு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
தர்மபுரி, தீபாவளி பண்டிகைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று, இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும். தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பண்டிகை காலம் தொடங்கி உள்ள நிலையில், இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள், உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளை உபயோகிக்கக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக்கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களில், தயாரிப்பாளரின் முழு முகவரி, தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக, https://foscos.fssai.gov.inஎன்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் படி, தங்களது வணிகத்தை பதிவு பெற்று கொள்ள வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.