சர்வர் பிரச்னையால் பத்திரப்பதிவு தொடர்ந்து 2வது நாளாக பாதிப்பு
அரூர், அரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், சர்வர் பிரச்னையால் நேற்று, 2வது நாளாக பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டது.தர்மபுரி மாவட்டம், அரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் சர்வர் முடங்கியதால், பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் டோக்கன் பெற்றவர்கள், பத்திரம் பதிவு செய்ய காத்திருந்தனர். காலை, 10:00 மணிக்கு வழக்கம்போல் பணி துவங்கிய நிலையில், சிறிது நேரத்தில் சர்வர் முடங்கியது. இதனால், பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் அவதியடைந்தனர். தினமும், 40 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்படும், இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என, தொடர்ந்து, 2 நாட்களாக இணையதள முடக்கத்தால், பத்திரப் பதிவுக்கு வந்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.