திரவுபதி, தர்மராஜ சுவாமி கோவில் தேரோட்டம்முறத்தால் அடி வாங்கி ஆசி பெற்ற பக்தர்கள்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் பழமையான திரவுபதி அம்மன் தர்மராஜ சுவாமி கோவிலில், 386ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த, 7ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மதியம் அலங்கரித்த தேரில் உற்சவ மூர்த்தி அமர வைக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது. டி.கொத்தப்பள்ளி, கூட்டூர், ஒசபுரம், எச்.செட்டிப்பள்ளி, கெலமங்கலம், சின்னட்டி உட்பட, 27க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலையில் தேர், நிலையை அடைந்தது.மதியம், 2:00 மணிக்கு மேல், கோட்டை சண்டை என்ற முறம், துடைப்பத்தால் பக்தர்களை அடித்து ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அருள் வந்து ஆடிய பூசாரி, பக்தர்கள் மீது முறம் மற்றும் துடைப்பத்தால் அடித்தார். இதனால், பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகும். குழந்தை வரம் மற்றும் கடனில்லாத வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை உள்ளதால், பக்தர்கள் முண்டியடித்து வந்து, அடி வாங்கி ஆசி பெற்றனர்.விழாவில் இன்று திரவுபதி அம்மன் அக்னி குண்ட பிரவேசம், பூங்கரகம், நாளை காலை, 10:00 மணிக்கு, அர்ஜூனன் மாடு திருப்பும் விழா, தர்மராஜ சுவாமிக்கு தாலாட்டு உற்சவம், வசந்தோற்சவம் நிகழ்ச்சிகள் நடக்கிறது.