பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரம் விரதமிருந்து வழிபாடு நடத்திய பக்தர்கள்
தர்மபுரி :புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தன. பழைய தர்மபுரி அடுத்த, வரதகுப்பம் வெங்கட்ரமண சுவாமி வெள்ளி கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அதேபோல், மூக்கனுார் ஆதிகேசவ பெருமாள் தங்கக்கவச அலங்காரத்திலும், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள், பாகலஹள்ளி சென்றாய பெருமாள் உட்பட மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். * அரூர் பழையபேட்டை கரியபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதேபோல், மொரப்பூர் சென்னகேசவ மற்றும் வரதராஜ பெருமாள் கோவில், எம்.வெளாம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட் ரமண பெருமாள் கோவில் மற்றும் மருதிப்பட்டி, பெத்துார், கொங்கவேம்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில், நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அரூர் கடைவீதியில், பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால், அதன் விற்பனை ஜோராக நடந்தது* கடத்துார் அடுத்த மணியம்பாடியில் உள்ள வெங்கட்ரமண சுவாமி, பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கடத்துாரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதேபோல் பொம்மிடி அடுத்த கதிரிபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று, இருளப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.