வரதட்சணை கொடுமை; இளம் பெண் தந்தையுடன் தீ குளிக்க முயற்சி
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நத்தமேட்டை சேர்ந்த மாதேஷ், 44. இவரது மகள் அஞ்சலி, 24. அதே பகுதியை சேர்ந்த ரயில்வே பணியாளர் தங்கமணி, 27. அஞ்சலியும், தங்கமணியும் காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தங்கமணியின் பெற்றோர் தன்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக அஞ்சலி பொம்மிடி, தர்மபுரி போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரித்து, தங்கமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆனால், தங்கமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் அஞ்சலியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அஞ்சலி, அவரது தந்தை மாதேஷ் ஆகியோர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்டனர். இது குறித்து, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.