அரூர் பஸ் ஸ்டாண்டிற்க்குள் செல்ல அரசு பஸ்களுக்கு அறிவுறுத்தல்
பாப்பிரெட்டிப்பட்டி, சேலத்திலிருந்து, அரூர் வழியாக வேலுார், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும், 100க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகிறன. இரவில், அரூர் வழியாக செல்லும் அரசு பஸ்களில், அரூர் பயணிகளை ஏற்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். காலியான இருக்கைகளுடன் பஸ்கள் சென்றாலும் கூட, பயணிகளை ஏற்றுவதில்லை. பயணிகளை ஏற்றினாலும், அரூர் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல், கச்சேரிமேட்டில் பயணிகளை இறக்கி விட்டு பைபாஸ் சாலை வழியாக பஸ்கள் சென்று விடுகின்றன. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகி வந்தனர். இதனால், அரூர் பஸ் ஸ்டாண்டுக்குள் அரசு பஸ்கள் வந்து செல்ல பொதுமக்களின் கோரிக்கை செய்தி, நேற்று நம்,'காலைக்கதிர்' நாளிதழில் வெளியானது. இதையடுத்து, தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர் உள்ளிட்ட அதிகாரிகள் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்ரோட்டில், அவ்வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பயணிகளுக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டு, வாகனம் செல்லும் வழித்தடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பைபாஸ் வழியாக செல்லாமல், அனைத்து பஸ்களும், அரூர் பஸ் ஸ்டாண்ட் சென்று, பயணிகளை இறக்கி விட்டு செல்ல வேண்டும். தனியார் பஸ்களில் அதிக கட்டணங்கள் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஓட்டுனர், நடத்துனர்களை எச்சரித்து அனுப்பினர்.தொடர்ந்து அவ்வழியாக சாலை வரி செலுத்தாமல் வந்த பொக்லைன் வாகனத்திற்கு, 1.03 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர்.