மாவட்ட கலைத்திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்
மாவட்ட கலைத்திருவிழாவில்அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்தர்மபுரி, நவ. 28-தர்மபுரி மாவட்ட அளவில், அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பலகுரல், நடனம், மெல்லிசை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தர்மபுரி மாவட்டம், குப்பூர் பஞ்.,க்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். இப்பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவன் சந்திரபிரகாஷ், பலகுரல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். மெல்லிசை போட்டியில், ஐந்தாம் வகுப்பு மாணவி மதுஸ்ரீ, மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றார். பலகுரல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சந்திரபிரகாஷ், மாநில அளவில் நடக்க உள்ள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இம்மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் சித்துராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர். தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தென்றலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.