ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2ம் கட்ட திட்ட ஆய்வு பணி நடந்துள்ளது
தர்மபுரி, ''ஒகேனக்கல், கூட்டு குடிநீர், 2ம் கட்ட திட்டத்திற்கு ஆய்வு பணி நடந்துள்ளது,'' என, அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.தர்மபுரி மாவட்டம், தடங்கத்தில் ஆக., 17ல் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அதற்கான விழா மேடை அமைக்கும் பணிகள் குறித்து, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு கொண்டார்.அதை தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், தடங்கத்தில் நடக்கும் அரசின் நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இது, தர்மபுரி மாவட்டத்தில் அவர் பங்கேற்கும், 5வது நிகழ்ச்சி. அதில், 871 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,135 முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளார். மேலும், 71,889 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என, 1,743 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வழங்க உள்ளார். தர்மபுரி மாவட்டம், தடங்கம் சிப்காட்டில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கி, அறிவிப்புகளை வெளியிட உள்ளார். காவிரியாற்றின் குறுக்கே, கோட்டையூர் ஒட்டனுார் இடையே பாலம் கட்ட மண் பரிசோதனை நடந்துள்ளது. விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடக்கும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட, 2ம் கட்ட திட்டத்திற்கு ஆய்வு பணிகள் நடந்துள்ளது. ஒவ்வொரு திட்டமாக, அடிக்கல் நாட்டி நிறைவேற்றப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.