ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் 25,000 பனை விதை நடும் பணி
ஒகேனக்கல், செப். 20-அரசு போக்குவரத்து கழகம், சேலம் கோட்டம் சார்பில், ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில், நேற்று, 25,000 பனை விதைகளை நடும் நடும் பணி நடந்தது.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை காவிரி கரையோரங்களில் பனை விதை நடும் பணிகளை ஊக்குவிக்கும் வகையிலும், பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் அரசு வழிகாட்டுதலின் படி, ஒரு கோடி பனை விதைகளை நடும் நெடும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 25,000 பனை விதைகளை நடும் பணியை, அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் சார்பில், நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.மேலும், தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய மரத்தின் முக்கியத்துவம் குறித்தும், வருங்கால தலைமுறையினருக்கு பனை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களுக்கும் சமூக வாழ்வியலுக்கும், பனையின் பயன்கள் பற்றிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.