மரவள்ளிக்கிழங்குக்கு விலை நிர்ணயம் முத்தரப்பு கூட்டத்துக்கு வலியுறுத்தல்
அரூர், நவ. 21- முத்தரப்பு கூட்டத்தை கூட்டி, மரவள்ளி கிழங்கிற்கு விலை நிர்ணயம் செய்ய, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து, அரூர் அன்னை பசுமை பூமி துல்லிய பண்ணை விவசாயிகள் சங்க தலைவர் திருமலை, கலெக்டர் சாந்திக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், நரிப்பள்ளி உள்ளிட்ட, சுற்று வட்டார பகுதிகளில் நடப்பாண்டு, இறவை பாசனம் மற்றும் மானாவாரியாக, 30,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் மரவள்ளி கிழங்கு நடவு செய்துள்ளனர். கடந்த, 2 மாதங்களாக அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. கடந்தாண்டு, மரவள்ளி கிழங்கு டன், 12,000 ரூபாய் வரை விற்பனையான நிலையில், நடப்பாண்டு, 5,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மரவள்ளிக்கிழங்குக்கு, தற்போது தனியார் ஆலை உரிமையாளர்கள் மட்டுமே விலை நிர்ணயம் செய்கின்றனர். இதனால், விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். எனவே, தர்மபுரி மாவட்டத்தில், ஆலை அதிபர்கள், அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டத்தை கூட்டி, மரவள்ளி கிழங்கிற்கு, உரிய விலை நிர்ணயம் செய்ய, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் மட்டுமே, மரவள்ளிக்கிழங்கு எடுத்துச் செல்லும் போது, செஸ் வரி வசூலிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இவ்வாறு இல்லை. மாவுப்பூச்சி மற்றும் செம்பேன் நோய் தாக்குதலில் இருந்து, மரவள்ளி பயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.