கார் விபத்தில் பெண் பலி; கணவனுக்கு காப்பு
மாரண்டஹள்ளி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த, பூமரத்துபள்ளத்தை சேர்ந்த கார் டிரைவர் ஸ்ரீதர், 24. இவர் கடந்த, 2 ஆண்டுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சீரா, 20 என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு, 6 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த, 6 அன்று இரவு, 12:30 மணிக்கு தன் காரில் மனைவியுடன் அருகே உள்ள, 5வது மைல் கிராமத்திற்கு சென்றுவிட்டு திரும்பினார். பூமரத்துபள்ளம் பஸ் ஸ்டாப் அருகே, காரின் கதவு திறந்ததால் வெளியே சாய்ந்த சீராவை, பிடித்து இழுக்க முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதியது. இதில், சீரா சம்பவ இடத்திலேயே பலியானார், ஸ்ரீதர் லேசான காயங்களுடன் தப்பினார். சீராவின் சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது உறவினர்கள் மாரண்டஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஸ்ரீதரை கைது செய்தனர். தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்திரி விசாரித்து வருகிறார்.