உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டல்லடிக்கும் ஓணம் வியாபாரம்; பாதிப்பில் விவசாயிகள்

டல்லடிக்கும் ஓணம் வியாபாரம்; பாதிப்பில் விவசாயிகள்

ஒட்டன்சத்திரம்: ஓணம் பண்டிகை யொட்டி ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் எதிர்பார்த்த அளவு வர்த்தகம் நடைபெறாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஞாயிறன்று ஓணம் பண்டிகை வருகிறது. வயநாடு நிலச்சரிவில் பலர் உயிரிழந்ததால் இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டத்தை கேரளா அரசு ரத்து செய்துவிட்டது. இதனால் கேரள வியாபாரிகள் வழக்கம் போல் காய்கறிகளை கொள்முதல் செய்யவில்லை. இப்பண்டிகையில் காய்கறிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே கேரள வியாபாரிகள் காய்கறிகளை அதிகமாக கொள்முதல் செய்யவது வழங்கம். பண்டிகை தொடங்குவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு வெண்டை, பயறு வகைகள் விலை பல மடங்கு அதிகரித்து காணப்படும். வியாபாரிகள் அதிகமாக காய்கறிகள் வாங்குவர் என்பதால் விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகளை பறித்துக் கொண்டு வருவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகளை மார்க்கெட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கேரள வியாபாரிகள் எதிர்பார்த்த அளவு காய்கறிகளை வாங்கவில்லை. இதனால் காய்கறி வர்த்தகம் மிகவும் குறைந்து போனது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருந்தபோதிலும் நேற்று முன் தினம் கிலோ ரூ.20க்கு விற்ற வெண்டைக்காய் நேற்று ரூ. 40 , ரூ.20 க்கு பெற்ற பச்சைப் பயறு ரூ.40க்கு விற்பனையானது.காய்கறி கடை உரிமையாளர் ஜமால்தீன் கூறியதாவது: ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் விற்பனை அதிகமாக இருக்கும். நல்ல விலையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அதிக அளவு காய்கறிகளை மார்க்கெட்டிற்கு கொண்டு வந்தனர். ஆனால் கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து காரணமாக வியாபாரிகள் எதிர்பார்த்த அளவு காய்கறிகளை கொள்முதல் செய்யவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை