மேலும் செய்திகள்
பிரதிஷ்டை இடங்களுக்கு சென்ற விநாயகர் சிலைகள்
27-Aug-2025
திண்டுக்கல் : விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்து 6 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.ஆயிரத்து 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மாவட்டத்தில் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வதற்கு போலீஸ், வருவாய்த்துறை அனுமதி கேட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்தன. அதில் கடந்த ஆண்டு சிலை வைத்த இடங்கள், பிரச்னை இல்லாத இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் ஆயிரத்து 262 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு போலீஸ் அனுமதி வழங்கப்பட்டது. பிரச்னைக்கு உரிய இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைதொடர்ந்து, நேற்று அதிகாலை 5:00 மணி முதல் இரவு வரை மாவட்டம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. அதன்படி திண்டுக்கல் டவுண் 66, புறநகர் 152, நிலக்கோட்டை 182, பழநி 158, ஒட்டன்சத்திரம் 133, கொடைக்கானல் 55, வேடசந்துார் 230 இடங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் ஆயிரத்து 6 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 2 அடி உயரம் முதல் அதிகபட்சம் 12 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில், தனிக்குழு அமைத்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி.,பிரதீப் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
27-Aug-2025