ஆடி வெள்ளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
திண்டுக்கல்: ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து பெண்கள் தரிசனம் செய்தனர்.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதையொட்டி ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஆடி முதல் வெள்ளி என்பதால் நேற்று அம்மன் கோயில்களில் கூட்டம் களைகட்டியது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் கோயிலில் காலை முதலே பக்தர்கள் வழங்கிய பாலை கொண்டு அம்மனுக்கு தொடர்ந்து அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.ஆடி முதல் வெள்ளி என்பதால் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு கூழ் படைத்து தரிசனம் செய்தனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை அம்மன் கோயில், நாகல்நகர் புவனேஸ்வரி அம்மன், நத்தம் ரோடு, அஷ்டலட்சுமி மலையடிவாரம் பத்திரகாளியம்மன் ,தெற்கு ரத வீதி அங்காள பரமேஸ்வரி, கோவிந்தாபுரம் ருத்ரகாளியம்மன், சமயபுரம் மாரியம்மன் என திண்டுக்கல்லில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.நத்தம் :நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிகிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பால், பழம், பன்னீர், விபூதி, இளநீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர். பகவதி அம்மன் காளியம்மன், ராக்காயி அம்மன், தில்லை காளியம்மன், வராகி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.சின்னாளபட்டி : கரியன் குளக்கரை தேவி கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் வழங்கிய கம்பு, கேழ்வரகு, அரிசி ஆகியவற்றை கலந்து கூழ் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேட்டுப்பட்டி, கீழக்கோட்டை, ஜனதா காலனி, சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.தங்கச்சி அம்மாபட்டி கரைமாரியம்மன் கோயில், பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில்,கே.அத்திக்கோம்பை காளியம்மன் கோயில் ,விருப்பாச்சி தலையூற்று நாக விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.பழநி: பெரியநாயகி அம்மன் கோயில் ,கிழக்கு ரத வீதி வீதி மாரியம்மன் கோயில், சிவகிரி பட்டி உச்சி காளியம்மன் கோயில், ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயில், புது தாராபுரம் ரோடு ரணகாளியம்மன் கோயில், கச்சேரி வீதி கூன காளியம்மன் கோயில் கொடுங்கலுார் பகவதி அம்மன் கோயில், அக்ரஹாரம் கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயில், நெய்க்காரப்பட்டி மண்டுகாளியம்மன் கோயில், ஹைகோர்ட் பத்திரகாளி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.