உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மோசடியிலிருந்து தப்பிக்க அறிவுரை

 மோசடியிலிருந்து தப்பிக்க அறிவுரை

வடமதுரை: வங்கியிலிருந்து யாரும் கணக்கு தொடர்பாக கேட்கவே மாட்டார்கள். சில மோசடி பேர்வழிகள் பண மோசடிக்கு முயற்சிக்கும்போது 'நேரடியாக வங்கிக்கு வரேன்' எனக்கூறி போன் இணைப்பை துண்டிக்க வேண்டும்' என பாகாநத்தம் கூட்டுறவு வங்கி செயலாளர் விஜயக்குமார் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: தற்போது சிலர் அவரவர் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு போன் மூலமே பேசி எளிதாக ஏமாறும் நபர்களது பணத்தை இணைய வசதியை பயன்படுத்தி சுலபமாக திருடுகின்றனர். வடமாநிலங்களை சேர்ந்த சிலர் தோராயமாக போன் எண்களை தேர்வு செய்து வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்கள் ஏ.டி.எம்., கார்டு செயலிழந்துவிட்டது ,வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதை விடுவிக்க கார்டு, பின் நம்பர்கள், ஓ.டி.பி, என கேட்கின்றனர். உண்மையிலே வங்கியில் இருந்து பேசுவதாக நம்பி விபரங்களை தருவோர் பணத்தை இழக்கின்றனர். இத்தகைய போன் அழைப்புகளை புரிந்த கொண்ட உடனே 'அப்படியா விஷயம் வங்கிக்கு நேரில் வரேன்' எனக்கூறி போன் தொடர்பை துண்டித்துவிட்டு நமது வேலையை பார்க்க சென்றுவிட வேண்டும். நீங்கள் வங்கிக்கும் செல்ல வேண்டாம். ஏனெனில் நடப்பில் எந்த வங்கியில் இருந்தும் யாரும் பேசி இதுபோன்ற விபரங்களை கேட்கவே மாட்டார்கள். வங்கி ஏ.டி.எம்.,கார்டுகளில் ரகசிய குறியீட்டு எண்களை குறித்து வைக்க கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கார்டுகளை தந்து பணம் எடுக்க உதவி பெற வேண்டாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !