சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு
வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் தேவிநாயக்கன்பட்டியில் ஊர் மக்கள் ஒன்று கூடி, சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து, வினோதமாக வழிபட்ட 'நிலா பெண்ணே' விடிய, விடிய நடந்தது.விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று ஒரு சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து, ஊர் மக்கள் ஒன்று கூடி வினோத வழிபாடு நடத்தி வருகின்றனர்.இதற்காக, நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே நிலா பெண்ணை தேர்வு செய்கின்றனர். அச்சிறுமியை நிலாவுக்கு மனைவியாக பாவித்து கொண்டாடுகின்றனர். பால், பழம், பேரிச்சை உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்குகின்றனர்.இந்தாண்டு குட்டம் ஊராட்சி, தலையூத்துப்பட்டியை சேர்ந்த ஆனந்தன் -- தமிழ்செல்வி தம்பதியின் மகள் தீக் ஷா, 13, தேர்வு செய்யப்பட்டார். நேற்று முன்தினம் தைப்பூசத்தை முன்னிட்டு, ஊரில் மாசடச்சியம்மன் கோவிலில் இருந்து மக்கள் புடைசூழ, நிலா பெண்ணுக்கு ஆவாரம் பூவை சூடி, கோவிலுக்கு அழைத்து வந்தனர்.அங்கு அவரை அமர வைத்து கும்மிபாட்டு பாடினர். மாவிளக்கு எடுத்து வந்த பெண்கள் சீர் செய்தனர். ஊர் எல்லையில் உள்ள நீர் நிறைந்த கிணற்றுக்கு நிலா பெண்ணை அழைத்துச் சென்று, ஆவாரம் பூக்களை கிணற்றிலிட்டு, மண் கலயத்தில் விளக்கு ஏற்றி, மிதக்க விட்டு வழிபட்டனர்.