பாதுகாப்பு கட்டமைப்பை மறுசீரமைப்பதில் தாமதம்
எரியோடு: எரியோடு ரயில்வே மேம்பாலத்தில் பாதுகாப்பு கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்யாமல் கிடப்பில் இருப்பதால் ஆபத்தான சூழல் உள்ளது. திண்டுக்கல் - கரூர் இடையே 1989ல் புதிதாக அகல ரயில்பாதை அமைக்கப்பட்டது. எரியோட்டில் ரயில்பாதையை வடமதுரை - ஒட்டன்சத்திரம் ரோடு குறுக்கிடும் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட நிலையில் பாலத்தில் இருந்து மின்பாதைக்கு இடையூறு, மின்தாக்குதல் சிக்கல்களை தவிர்க்க பாலத்தில் இரு பக்கமும் இரும்பு கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டது. சமீபத்தில் பாலத்தின் சிதைந்த ஜன்னல் போன்ற துாண்கள் கொண்ட கட்டமைப்பு அகற்றப்பட்டு சுவர் வடிவில் எழுப்பபட்டது. இப்பணி முடிந்து சில வாரங்கள் கடந்தும் இன்னமும் மின்பாதை பாதுகாப்புக்குரிய கட்டமைப்புகள் மீண்டும் பொருத்தப்படாமல் கிடப்பில் உள்ளன. ஏதேனும் விரும்பதகாத சம்பவங்கள் நடந்தேறும் முன்னர் இங்கு பாதுகாப்பு கட்டமைப்புகளை நிறுவ ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.