அவசர உதவி 100 அழைப்புக்கு ஒருமணி நேரத்தில் தீர்வு
திண்டுக்கல்: காவல் அவசர உதவி எண்ணான '100' அழைப்புகளை அதிக அளவில் கையாண்டு ஒரு மணிநேரத்திற்குள், பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை செயல்படுகிறது. அடிதடி, விபத்து, பாதுகாப்பு, மீட்பு உள்ளிட்ட அவசர உதவிகளுக்காக போலீஸ் அவசர உதவி எண் '100' அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் அதிக அளவில் அவசர உதவி அழைப்புகளை கையாளும் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் ஒன்றாக இருக்கிறது. இதுகுறித்து அதி காரிகள் தெரிவிக்கையில், 'மாவட்டத்தில் நாளொன்றுக்கு 120 முதல் 130 அழைப்புகள் வருகிறது. இதுவே வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் இதைவிட அதிகம் வரும். அவ்வாறு வரும் அழைப்புகளின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., பிரதீப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அருகில் இருக்கும் ரோந்து வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷன்ககள், டூவீலர் ரோந்து போலீசுக்கு தகவல் தெரிவித்து ஒருமணி நேரத்துக்குள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி முடித்து வைக்கப்படுகிறது. உதவி கேட்பவரின் விவரம், அலைபேசி எண், பிரச்னையின் தன்மை, இருப்பிடம் ஆகியவற்றை துல்லியமான விவரங்களுடன் போலீசுக்கு அனுப்புவதால் விரைந்து செயல்பட முடிகிறது. இதற்கான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் மாவட்ட காவல்துறை முயற்சியின் பேரில் செயலாக்கத்தில் உள்ளது. ஆள் பற்றாக்குறை ஏற்படாமல் சுழற்சி முறையில் போதுமான பணியாளர்களும் இருப்பதால் செயல்பட முடிகிறது என்றனர்.