மகள் காதல் திருமணத்தால் ஆத்திரம்; மருமகனை கொன்ற மாமனார் கைது
நிலக்கோட்டை; நிலக்கோட்டை அருகே மகள் வேறு ஜாதியை சேர்ந்த வாலிபரை காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில், ஐந்து மாதங்கள் காத்திருந்து மருமகனை கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் பால் வியாபாரி ராமச்சந்திரன், 24. இவர், கணபதிபட்டி பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் மகள் ஆர்த்தி, 22, என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் காதலுக்கு சந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை மீறி கடந்த ஜூனில் இருவரும் திருமணம் செய்தனர். ராமச்சந்திரன் மீது ஆர்த்தி குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்தனர். இந்நிலையில், குளிப்பட்டி கிராமத்திற்கு பால் கறவைக்கு ராமச்சந்திரன் டூ வீலரில் நேற்று மாலை, 5:00 மணியளவில் சென்று கொண்டிருந்தார். கூட்டாத்து அய்யம்பாளையம் என்ற இடத்தில் அவரை வழிமறித்த சந்திரன் அரிவாளால் வெட்டினார். கை துண்டான நிலையில், படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பாலத்திலேயே சரிந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சந்திரனை நிலக்கோட்டை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்த இடத்தை எஸ்.பி., பிரதீப் ஆய்வு செய்தார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.