உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மகப்பேறு சஞ்சீவி திட்டத்தில் 730 கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம்

மகப்பேறு சஞ்சீவி திட்டத்தில் 730 கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம்

திண்டுக்கல்: ''சித்தமருத்துவத்தில் மகப்பேறு சஞ்சீவி திட்டத்தில் 730 கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது''என திண்டுக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

சித்த மருத்துவத்தை மக்கள் விரும்புகிறார்களா...

முன்பு இருந்ததை விட சித்த மருத்துவத்திற்கு ஏராளமான மக்கள் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளனர். கொரோனா காலத்தில் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டது இந்த சித்தமருத்துவத்தில் தான். எந்த பக்க விளைவுகளும் இதில் ஏற்படாமலிருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் கூடுதலாக தற்போது சித்த மருத்துவத்தை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

எத்தனை இடங்களில் சித்த மருத்துவமனை உள்ளது...

மாவட்டம் முழுவதும் 58 இடங்களில் சித்த மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மக்களுக்கு தினமும் காலை நேரங்களில் நிலவேம்பு கசாயம் கட்டாயமாக வழங்குகிறோம். இதை மருத்துவமனைக்கு வரும் மக்களை அவசியமாக பருக சொல்கிறோம். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மருத்துவமனைகளில் ஆய்வுகள் செய்யப்படுகிறதா...

மாவட்டம் முழுவதும் செயல்படும் மருத்துவமனைகளில் மருந்துகள் இருப்பு எவ்வளவு,டாக்டர்கள் முறையாக வருகிறார்களா. மக்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்தெல்லாம் அடிக்கடி ஆய்வுகள் செய்கிறோம். குறைபாடுகள் எதுவும் இருந்தால் அதையும் சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறோம்.

எந்தமாதிரி நோய்களுக்காக மக்கள் அதிகளவில் சித்த மருத்துவத்தை அணுகுகிறார்கள்..

சாதாரண சளி,காய்ச்சல் போன்ற எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் சித்த மருத்துவத்தில் நல்ல சிகிச்சை கொடுப்பதால் அதிகளவில் மக்கள் வருகின்றனர். இதுதவிர ரத்த அழுத்தம்,வாய்ப்புண்,சர்க்கரை நோய் இருப்பவர்களும் வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் நலனுக்காக திட்டம் எதுவும் உள்ளதா...

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்காக இளந்தளிர் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் மாவட்டம் முழுவதும் செயல்படும் அரசு பள்ளிகளில் முகாம்கள் அமைக்கப்படும். அதில் எல்லா மாணவர்களையும் பரிசோதித்து யாருக்கு எந்த குறைபாடுகள் உள்ளது என ஆய்வு செய்து அதற்குரிய மருந்துகளை வழங்குகிறோம். குறிப்பாக கவனம் சிதறல், ,நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்,வளர் இளம் பெண்களுக்காக,பி.சி.ஓ.டி.,போன்ற பிரச்னைகளுக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 4577 பள்ளி மாணவர்கள் பயனடைகிறார்கள். இதற்காக 12 மருத்துவமனைகளுக்கு வருடத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.

* மலைவாழ் மக்களுக்காக சித்த மருத்துவ முகாம் நடக்கிறதா...

கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்காக அடிக்கடி நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. அதற்கென தனி டாக்டர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கும் சித்த மருத்துவம் வழங்க முயற்சி செய்கிறோம். இதிலும் ஏராளமானோர் பயனடைகின்றனர்.

சித்த மருத்துவத்தில் கர்ப்பிணிகளுக்கு உதவிகள் வழங்கப்படுகிறதா...

கர்ப்பிணிகளுக்காக மகப்பேறு சஞ்சீவி எனும் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் கர்ப்ப காலத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த வகையில் இந்தாண்டு 10 மாதத்தில் 730 கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளதா...

மாவட்டத்தில் 6 இடங்களில் டாக்டர்கள் இல்லை. மருந்தாளுனர்கள் பற்றாக்குறையும் அதிகளவில் உள்ளது. அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் பூர்த்தி செய்யப்படும்.

பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறீர்களா...

அதிகளவில் நாங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வுகள் மூலம் அதிகளவிலான மக்கள் சித்த மருத்துவத்தை நாடி வரத்தொடங்கி உள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி