உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இரவு கடைசி டிரிப் பஸ் சேவை துண்டிப்பால்  பரிதவிக்கும் மக்கள் ! பல கி.மீ.,துாரத்தை நடந்தே கடக்கும் அவலம்

இரவு கடைசி டிரிப் பஸ் சேவை துண்டிப்பால்  பரிதவிக்கும் மக்கள் ! பல கி.மீ.,துாரத்தை நடந்தே கடக்கும் அவலம்

வடமதுரை : திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்கள் இரவு நேர கடைசி டிரிப்களை இயக்காமல் நிறுத்தி வைப்பதால் மக்கள் பல கி.மீ., துாரம் நடக்கும் அவல நிலை உள்ளது.நாட்டில் அனைவருமே சொந்த வாகனங்களில் பயணிக்க தடை இல்லை என்றாலும், எல்லாருக்கும் வசதி வாய்ப்புகள் இருப்பதில்லை. அதோடு அதிக எண்ணிக்கையில் தனிநபர் பயன்பாடு வாகனங்கள் இருந்தால் காற்று மாசுப்படுதல், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும். இதனால் பொது போக்குவரத்து வாகனங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு அரசுகள் வலியுறுத்துகின்றன. இதற்காக 24 மணி நேரமும் நகரங்களை இணைக்கும் வகையில் விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராமங்களை, நகரங்களுடன் இணைக்கும் வகையில் செயல்படும் டவுன் சேவைகள் அதிகாலை துவங்கி இரவு 11:00 மணி வரை இயக்க அரசு, தனியார் டவுன் பஸ் நிர்வாகங்கள் பயண நேர அட்டவனை தயாரித்து வட்டார போக்குவரத்து துறையில் அனுமதி பெறுகின்றனர். காலமுறையில் இதற்காக அரசுக்கு வரியும் செலுத்துகின்றனர். ஆனால் இந்த டவுன் பஸ்கள் பயணிகள் கூட்டம் இருக்கும் பகல் நேரங்களில் தடையின்றி இயக்கப்படுகின்றன. குறைவாக இருக்கும் இரவு நேர கடைசி டிரிப்பை மாவட்டத்தில் பெரும்பாலான வழித்தடங்களில் இயக்குவதில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து சிறுநகர் பகுதிகளுக்கு விரைவு பஸ்கள் மூலம் வந்திறங்கும் பயணிகள் அதிக செலவில் ஆட்டோ, கார் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. இந்த வசதியும் சில வழித்தடங்களுக்கு கிடைப்பதில்லை. குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் கூலி தொழிலாளர்களால் ஆட்டோ, கார் வாடகைக்கு எடுக்க பொருளாதார வசதியும் இல்லை. இதனால் ரோடுகளில் இரவு நேரங்களில் குறுக்கிடும் விஷ பூச்சிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல கி.மீ., துாரம் நடந்து செல்லும் பரிதாபம் உள்ளது. எனவே டவுன் பஸ்கள் அனுமதி பெற்ற இரவு கடைசி டிரிப்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

jeevendrakumar k
டிச 28, 2025 15:31

மக்களின் எல்லா கஷ்டங்களுக்கும் காரணம். மக்களை துரும்பாக கூட மதிக்காத அதிகாரிகள். குடும்ப ஓய்வூதியத்தை நிறுத்தினா பாவப்பட்ட கிராம மக்களின் துயரம் தெரியும்.


Mani . V
டிச 28, 2025 07:50

சரி, சரி, ரொம்பப் புலம்பாதீங்க. பிப்ரவரி மாதத்தில் இருந்து தேர்தல் வரையில் பேருந்தை இயக்குகிறோம். தேர்தலுக்குப் பின் வழக்கம் போல் நடந்து சாகுங்கள்.


புதிய வீடியோ