உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பட்டா கோரி போராட்டம்; ஜாதி சான்று கேட்டு தர்ணா குறைதீர் கூட்டத்தில் 420 பேர் முறையீடு

பட்டா கோரி போராட்டம்; ஜாதி சான்று கேட்டு தர்ணா குறைதீர் கூட்டத்தில் 420 பேர் முறையீடு

திண்டுக்கல்: பட்டா வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ஜாதி சான்றிதழ் கேட்டு தர்ணா என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 420 பேர் மனுக்கள் வாயிலாக முறையிட்டனர்.கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 420 மனுக்கள் பெறப்பட்டன. திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி, ஆலக்குவார்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில், 1997--98 ல் எங்கள் பகுதியை சேர்ந்த பலருக்கு ஆலக்குவார்பட்டியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதில் பலர் வீடு கட்டியும், தற்போது வரை வீட்டுவரி செலுத்தியும் வசிக்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் பட்டா கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் அதிகாரிகள் தர மறுக்கின்றனர். நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்கள் பெயரில் வீட்டுமனை பட்டா இல்லை என்கின்றனர். உரிய விசாரணை நடத்தி ஆன்லைன் பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இருப்பினும் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறினர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் சமாதானமடைந்த கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பணி வழங்ககோரி வலியுறுத்தல்

ஆத்துார் தாலுகா தேவரப்பன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில் 3 மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.கள்ளிமந்தையம் பகுதியை சேர்ந்த ராம சந்திரகலா கொடுத்த மனுவில், ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்ட பிறகும் அகற்றப்படாமல் உள்ளது. அதை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்களுடன் தர்ணா

இது போல் வேடச்சந்துார் பிலாத்து அடுத்த வாலிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது : வாலிசெட்டிப்பட்டியில் 300-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்காக சாதி சான்றிதழ் கேட்டு இணையதளம் மூலம் விண்ணப்பித்தோம். தர முடியாது என தெரிவித்து விட்டனர். ஏற்கனவே எங்கள் பகுதியில் 40-க்கு மேற்பட்டோருக்கு சாதி சான்றிதழ் வழங்கிய நிலையில் மீதமுள்ள 36 பள்ளி மாணவர்களுக்கு வழங்க மறுக்கின்றனர்.குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியவில்லை என்றனர். தொடர்ந்து போலீசார் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை