துவங்கியது நரி இலந்தை பழ சீசன்
வடமதுரை : வடமதுரை, அய்யலுார் மலைப்பகுதி, அடிவாரப் பகுதி நிலங்களிலும் நரிஇலந்தை மரங்கள் உள்ளது. புதர் போல் வளரும் தன்மையுடைய இந்த மரங்களில் முள் அதிகம் இருப்பதால் விளை நிலங்களில் இருப்பதை விவசாயிகள் விரும்புவதில்லை. அதே நேரம் மலைகளில் இயற்கையாக அதிகளவில் வளர்ந்து வன விலங்குகளுக்கு உணவாக நரி இலந்தை பழங்கள் பயன்படுகிறது.மலைகளில் வழக்கமாக சிறு வன மகசூல் எடுப்போர் நரி இலந்தை மரங்களுக்கு அடியில் துணிகளை விரித்து மரத்தை பலமாக அசைப்பதன் மூலம் பழங்களை கீழே விழ செய்து சேகரிக்கின்றனர். ஆண்டுதோறும் தை, மாசி மாதங்களில் மட்டும்இந்த பழங்கள் கிடைக்கும். பள்ளி சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் இந்த பழங்களை சூறைப்பழம் எனவும் அழைப்பர். தற்போது சீசன் துவங்கி விற்பனைக்கான வரத்து அதிகரித்துள்ளது.