சேம்பர் கண்காணிப்பாளர் இறப்பில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து மறியல்
உடலை வாங்க மறுத்து மறியல்திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி செங்கல் சேம்பர் கண்காணிப்பாளர் சரணவன் 23, இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து அவரின் உறவினர்கள் திருச்சி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை அவரது உடலை வாங்கவில்லை. பழநி அருகே தும்பலபட்டியைச் சேர்ந்த மகுடீஸ்வரன் மகன் சரவணன் அப்பகுதியிலுள்ள செங்கல் சேம்பரில் கண்காணிப்பாளராக பணிபுரிந்தார். சேம்பரில் வடமாநில இளைஞர்கள் பணிபுரிகின்றனர். ஆக., 9 இரவு சேம்பருக்கு செல்வதாக கூறிச்சென்ற சரவணன் அங்கு இறந்துக்கிடந்தார். அங்கு சென்ற அவரது உறவினர்கள் வடமாநில இளைஞர் களால் சரவணன் கொலை செய்யப்பட்டதாக கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் உடலை மீட்க விடாமல் போலீசை தடுத்து மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., தனஞ்ஜெயன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 7 மணி நேரத்துக்கு பின் உடல் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பினர். இந்நிலையில் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் சரவணன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறி சேம்பர் உரிமையாளர், மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து அனுப்பினர். அதன்பின் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வந்த சரவணன் உறவினர்கள் திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., கார்த்திக் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் சரவணன் உடலை வாங்கமாட்டோம் எனவும் அவர்கள் கூறினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் நேற்று மாலை வரை சரவணன் உடலை உறவினர்கள் வாங்கவில்லை.
கொலை வழக்காக மாற்றம்
ஒடிசா தொழிலாளி, மகள்கள் கைது
இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதே சேம்பரில் பணிபுரியும் தொழிலாளி ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் பாரிக் 43, என்பவரது 17 வயது மகளுடன் ஆக., 9 இரவு சரவணன் செல்வது தெரிய வந்தது. மேலும் சிறிது நேரத்தில் கோபால் பாரிக்கின் மற்றொரு 14 வயது மகளுடன் அதே 17 வயது மகள் செல்வது போன்றும் பதிவாகியிருந்தது. இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக கீரனுார் போலீசார் மாற்றினர். மேலும் கோபால் பாரிக் 43, அவரது 17, 14 வயது மகள்களையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.