கட்டுப்பாடின்றி செல்லிங் மது விற்பனை தாராளம்! அரசியல், கவனிப்பால் கண்துடைப்பு நடவடிக்கை
மாவட்டத்தில் 150க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் பார் ஒதுக்கீடு உள்ளது. பார் ஒதுக்கீட்டை பெற டெண்டர் தொகை மட்டுமின்றி இரு மடங்கு காப்பு தொகை செலுத்த வேண்டும். மாவட்டத்தில் பரவலாக இவற்றைவிட கூடுதலான எண்ணிக்கையில் அனுமதியற்ற பார்கள் இயங்குகின்றன. அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி அரசு துறை பொறுப்புகளில் உள்ள பலரும் செல்வாக்கு காரணமாக அனுமதியற்ற விற்பனையில் ஆதிக்கம் காட்டி வருகின்றனர். போதாக்குறைக்கு ஒவ்வொரு கடையை சுற்றிலும் அந்தந்த பகுதி அரசியல் புள்ளிகளின் ஆதரவுடன் பச்சை வலை கட்டி சிறப்பு முகாம்கள் அமைத்து அனுமதியற்ற விற்பனை நடக்கிறது. கிராம , மாநில, தேசிய நெடுஞ்சாலை என சரக்கு விற்பனை நடக்காத ரோடுகளே இல்லை என்ற நிலையில் உள்ளது. கடைகளுக்கான ஒதுக்கீட்டில் 70 சதவீதத்திற்கும் கூடுதலான பெட்டிகள் இவற்றிற்கு அனுப்பப்படுகிறது. குடிமகன்கள் அதிகம் விரும்பும் ரகங்களை மொத்தமாக வழங்குகின்றனர். இது தவிர டாஸ்மாக் கடைகளில் ரகத்திற்கு ஏற்ப 10 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் வசூல் புகார் நீடிக்கிறது. இவற்றுடன் போலி மது பிரச்னைகளும் குடிமகன்களை பாதிப்பிற்கு உள்ளாக்கி வருகின்றன. அரசு வருவாயை பாதிக்கும் அனுமதியற்ற விற்பனையை அரசியல் அழுத்தம், விலை போகும் அதிகாரிகளை கடந்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.