மஞ்சளாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
வத்தலக்குண்டு: ஜி.தும்மலப்பட்டி மஞ்சளாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு பாசனத்திற்கும் வத்தலக்குண்டு, கெங்குவார்பட்டி பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் மஞ்சளாறு உள்ளது. இந்த ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. 400 அடி அகலம் கொண்ட மஞ்சளாறு தற்போது 100 அடி முதல் 25 அடி வரை சுருங்கி காணப்படுகிறது. இது நாளடைவில் ஓடையாக மாறிவிடும் என்ற அச்சத்தில் உள்ள விவசாயிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஜி. தும்மலப்பட்டி கணவாய்ப்பட்டி அணை அருகே பாறாங்கற்களை கொட்டி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், இதனால் தண்ணீர் வரும் காலங்களில் நீரின் திசை மாற்றப்பட்டு அருகிலுள்ள தாழ்வான விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆற்றில் கொட்டப்பட்ட பாறாங்கற்களை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.