108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
ஈரோடு: ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முகேஷ் - சங்கீதா தம்பதி. இவர்களுக்கு, 3 குழந்தைகள் உள்ளனர். மீண்டும் நிறைமாத கர்ப்பிணியான சங்கீதாவுக்கு நேற்று அதிகாலை, 2:30 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதுபற்றி, 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூளை பகுதியில் இருந்து வந்த, 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணி சங்கீதாவை ஏற்றி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் சங்கீதாவுக்கு, பிரசவ வலி அதிகரித்தது. ஆம்புலன்ஸில் இருந்த அவசர கால மருத்துவ நிபுணர் புஷ்பராஜ், ஓட்டுனர் ஸ்பார்ஜன் ஆகியோர் உதவியுடன் சங்கீதாவுக்கு பிரசவம் பார்த்தனர்.அதிகாலை, 3:15 மணிக்கு ஆம்புலன்ஸிலேயே அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின், தாய், சேயை அழைத்து வந்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.இக்கட்டான நிலையில் பிரசவம் பார்த்து, தாய், சேயை காப்பாற்றிய புஷ்ப ராஜ், ஸ்பார்ஜனை பலரும் பாராட்டினர்.