கூண்டில் சிக்கிய 26 குரங்குகள்
சென்னிமலை:சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், மலை அடிவார பகுதிகளில், ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகின்றன. பக்தர்களிடம் தின்பண்டங்கள் மற்றும் பொருட்களை பறித்து செல்வதும், வீடுகளில் புகுந்து பொருட்களை எடுத்து செல்வதும் நடந்தது. இதனால் பக்தர்கள், மக்கள் எந்நேரமும் அச்சத்துடனே இருக்க நேரிட்டது. குரங்குகளை பிடிக்க திருக்கோவில் நிர்வாகம் மற்றும் சென்னிமலை டவுன் பஞ்., நிர்வாகம் சார்பாக வனத்துறைக்கு கடிதம் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறை சார்பாக மலை கோவில் ராஜகோபுரம் முன் பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம், மலை அடிவார பகுதி, மாரியம்மன் கோவில் அருகே என ஐந்து இடங்களில் கூண்டு வைத்தனர் இந்த கூண்டில் நேற்று மாலை வரை, 26 குரங்குகள் பிடிபட்டன.