குப்பை கொட்ட எதிர்ப்பு: நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு
புன்செய் புளியம்பட்டி, டிச. 12-புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தை வளாகத்தில், கொட்டப்பட்ட குப்பையை அகற்ற வலியுறுத்தி, நகராட்சி வாகனத்தை மக்கள், வியாபாரிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.புன்செய்புளியம்பட்டி நகராட்சி, வாரச்சந்தை வளாகத்தில், குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையம் உள்ளது. நகராட்சியில் தினமும் சேகரமாகும் குப்பை, உரம் தயாரிக்கும் மையம் அருகே, வாரச்சந்தை காலியிடத்தில் கொட்டப்படுகிறது. முறையாக அகற்றாமல், குவிந்து காணப்படும் குப்பைக்கு நகராட்சி துப்புரவு ஊழியர்களே, தீ வைத்து எரிக்கின்றனர். பிளாஸ்டிக், மருத்துவ கழிவு, டயர்களை தீயிட்டு எரிப்பதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை எழுகிறது.தொடர்ந்து புகைந்து கொண்டே இருப்பதால், அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். சந்தை வளாகத்தில் கொட்டப்பட்ட குப்பையை அகற்ற கோரி, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி நேற்று காலை, 11:00 மணியளவில் குப்பை கொட்ட வந்த வாகனத்தை அப்பகுதி மக்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள், வியாபாரிகள் கூறுகையில், 'வாரச்சந்தை வளாகத்தில், கால்நடை சந்தை நடக்கும் இடத்தில் குப்பை கொட்டப்படுவதால், மாடுகளை கட்டி வியாபாரம் செய்ய முடிவதில்லை. குப்பைக்கு நகராட்சி துப்புரவு ஊழியர்களே, தீ வைத்து எரிக்கின்றனர். பலமுறை புகார் அளித்தும் நகராட்சி கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தின் இரண்டாவது பெரிய சந்தையான புளியம்பட்டி சந்தையின் அடையாளத்தை, நகராட்சி நிர்வாகம் அழித்து வருகிறது. வாரச்சந்தையை குப்பை கிடங்காக மாற்றி, நகராட்சி நிர்வாகம் சாதனை படைத்துள்ளது,' என்றனர். ஒரு மாதத்துக்குள், வாரச்சந்தை வளாகத்தில் கொட்டப்பட்ட குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் உறுதி கூறப்பட்டதையடுத்து மக்கள் வாகனத்தை விடுவித்தனர்.