வினாத்தாள் மையத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
ஈரோடு:ஈரோட்டில் பிளஸ் 2 துணை தேர்வு வினாத்தாள் அறைக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக துணை தேர்வு வரும், 29ல், துவங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 துணை தேர்வை, 785 பேர் எழுத உள்ளனர். ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, சத்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோபி நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 துணை தேர்வு வினாத்தாள் ஈரோடு காந்திஜி சாலை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தது. வினாத்தாள் கட்டுகள் சரிபார்க்கப்பட்டது. அதன் பின் வினாத்தாள்கள் தனி அறையில் வைத்து பூட்டி சீலிடப்பட்டது.துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி கல்வி துறையினரும் அவ்வப்போது மையத்துக்கு சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.