தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோடு:தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், ஈரோடு காவிரி ஆற்றில், வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமை, தாசில்தார் முத்து கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.வெள்ளத்தில் சிக்கியவர்களை ரப்பர் படகுகளை பயன்படுத்தி மீட்பது, முதலுதவி அளிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தால் வீட்டில் உள்ள காலி தண்ணீர் கேன், தேங்காய் மட்டை, வாழை மரம், தெர்மாகோல், வாகன டயர், டியூப் பயன்படுத்தி மிதவை தயாரிப்பது குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர். தீயணைப்பு துறையில் பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், அவற்றின் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் கலைச்செல்வன், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்துக்கொண்டனர்.