தமிழகத்தில் நடப்பது அதிகாரிகள் ஆட்சி பா.ஜ., தலைவர் விமர்சனம்
ஈரோடு, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு முதல் செயற்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். முக்கிய பிரமுகர்கள், தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி மனுக்களை பெற்றார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது: தொழில் நிறுவனங்கள் சார்பில் வழங்கிய மனுக்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு பிரச்னையை தீர்க்க வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது. கேந்திரிய வித்யாலயா அமைக்க மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., நிலம் வாங்கி கலெக்டரிடம் அனுமதி கோரியும் இதுவரை கிடைக்கவில்லை. தமிழகத்தில் முதல் வர் பல்வேறு விஷயங்களில் நமது கருத்துகளை ஏற்று செயல்படுத்த நினைக்கிறார். ஆனால் தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சி தான் நடக்கிறது. வரும், 2026ல் மாற்றம் வந்தால் தமிழகம் ஒளிரும். 50 ஆண்டுக்குரிய சொத்து வரியை தமிழகத்தில் மக்கள் செலுத்தி வருகின்றனர். அரசு இயந்திரம் என்பது இரட்டை இன்ஜின் கொண்டது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துக்கும் எதிர்ப்பு என்பதால் பாதிப்பு நமக்குதான். இ.பி.எஸ்., ஆட்சியில் தமிழகத்தில் வளர்ச்சி பணிக்கு உரிய நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைத்தது. இதற்கு மத்திய அரசுடன் அவர் மேற்கொண்ட இணக்கமான சூழலேயாகும். மத்திய அரசுடன், மாநில அரசு ஒத்து போக வேண்டும். இவ்வாறு பேசினார்.