சோலாரில் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி: முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்; அமைச்சர் தகவல்
ஈரோடு: ஈரோடு மாவட்ட தெற்கு, வடக்கு தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான முத்துசாமி பேசியதாவது: தமிழக முதல்வரை வரவேற்று பொது இடத்தில் தட்டி வைக்க கூடாது. அரசு சுவர்களில் விளம்பரம் செய்ய கூடாது. கொடிகள் ஒரே மாதிரி வைக்க வேண்டும்.வரும் 19 மதியம் கோவையில் இருந்து விஜயமங்கலம் டோல்கேட், பெருந்துறை வழியாக ஈரோடுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிறார். ஈரோடு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். பின்னர் மேட்டுக்கடையில் தனியார் மண்டபத்தில், கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். தொடர்ந்து மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.20ம் தேதி காலை சோலாரில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். சோலாரில் 10 ஏக்கரில் காய்கறி மார்க்கெட் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் எம்.பி., பிரகாஷும் பேசினார்.கூட்டத்தில் நெசவாளர் அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார், எம்.பி., அந்தியூர் செல்வராஜ், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன், அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம், மாநகர செயலாளர் சுப்பிரமணி, கேபிள் டி.வி. வாரிய முன்னாள் தலைவர் குறிஞ்சி சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.